இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கிறது
ஈரானின் கப்பல்களிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களை, ஈரானுக்கு திருப்பியனுப்பக் கூடாது என்று, இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக ரொய்ட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
'US pressing Sri Lanka not to repatriate Iranian crew and survivors from sunken ship, memo says' எனும் தலைப்பில் - அந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 04ஆம் திகதி ஈரான் கப்பலொன்றை இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பலொன்று தாக்கியது. இதனையடுத்து அதிலிருந்த 32 பேரை இலங்கைப் படையினர் காப்பாற்றியதோடு, 84 சடலங்கையும் மீட்டனர். கடந்த மாதம் வங்காள விரிகுடாவில் இந்தியா ஏற்பாடு செய்த - கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்று விட்டு, நாட்டுக்குத் திரும்பிய ஈரானிய கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியது.
பின்னர், மற்றொரு ஈரானிய கப்பலில் இருந்த 208 பேர் இலங்கைக்குள் அழைத்து வரப்பட்டதோடு, கப்பல் தரித்து நிற்பதற்கும் இலங்கை இடம் வழங்கியது.இந்த நிலையிலேயே, காப்பாற்றப்பட்ட ஈரானியர்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று, இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கிறது.
மேலும் இலங்கையிலுள்ள மேற்படி ஈரானியர்களை வைத்து - பிரசாரங்களை மேற்கொள்வதற்கு, ஈரான் எடுக்கும் முயற்சிகளை இலங்கை குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுள்ளது.
ஆனாலும், இதற்கு உடனடியாக இலங்கை பதிலளிக்கவில்லை என்றும் ரொய்ட்டஸ் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கப்பலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை திருப்பி அனுப்ப - இலங்கையிடம் ஈரான் உதவி கேட்டதாகவும், ஆனால் அதற்கான காலக்கெடு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி தம்மிடம் கூறியதாகவும் ரொய்ட்டஸ் தெரிவித்துள்ளது.

Post a Comment