நீதிமன்றை நாடும் 120 பொலிஸ் பொறுப்பதிகாரிகள்
(எம்.எப்.எம்.பஸீர்)
நாடளாவிய ரீதியில் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 120 பேர் குறித்த இடமாற்றங்களுக்கு எதிராக நீதிமன்றை நாட தீர்மானித்துள்ளனர்.
குறித்த 120 பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், தங்களுக்கான இடமாற்றம் நியாயமற்றது எனக் கூறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த 23ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இடமாற்றமானது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவ்வமைச்சின் செயலரின் தேவைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ள பின்னணியில் 120 பேர் இவ்வாறு உயர் நீதிமன்றை நாடவுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்பையும் மீறி, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
தேர்தலை இலக்குவைத்து இந்த இடமாற்றம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் பரவலாக பேசப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரின் கையெழுத்து மற்றும் நேரடி உத்தரவு எதுவும் இன்றி, பொலிஸ் திணைக்களத்தின் மனித வள முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.என். சிசிர குமாரவின் கையெழுத்துடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவுக்கு அமைய இந்த இடமாற்றம் வழகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment