தனக்கு ராஜாங்க அமைச்சர் பதவி கிடைப்பதை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தடுத்து நிறுத்தி விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் றிசாட் பதியுதீன் பேசி, தனக்கு கிடைக்கவிருந்த ராஜாங்க அமைச்சர் பதவியை தடுத்ததாகவும் இதன்போது முஷாரப் குறிப்பிட்டார். ‘நியூஸ் பெஸ்ட்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நியூஸ் லைன்’ நேர்காணலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். 

“றிசாட் பதியுதீன் உங்களுக்கு கிடைக்கவிருந்த அமைச்சர் பதவியை தடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா” என, நிகழ்ச்சி நடத்துநர் றியாஸ் ஹாரிஸ் கேள்ளியெழுப்பியபோது, ஆதாரத்தை முன்வைப்பதற்கு தவறிய முஷாரப், றிசாட் பதியுதீன் தடுத்தார் என – தான் கேள்விப்பட்டதாக கூறினார். 

முன்னாள் ஊடகவியலாளரான முஷாரப்; ‘துல்லியமான ஆதாரங்களின்றி ஒரு குற்றச்சாட்டினை முன்வைக்கக் கூடாது’ என்பதைக் கூட – அறியாதவராக இருக்க முடியாது

இதேவேளை, அண்மையில் வழங்கப்பட்ட ராஜாங்க அமைச்சர்களின் பட்டியலில் தனது பெயர் இருந்ததாகவும், இறுதி நேரத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த பதவி – கிடைக்கவில்லை எனவும் கூறிய அவர்; “இறுதி நேரத்தில் அது என்ன முடிவு? யாரால் எடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது” என்றும் குறிப்பிட்டார். 

அந்த வகையில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அந்த நேர்காணலில் முஷாரப் வழங்கியிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

தனக்கு கிடைக்கவிருந்த ராஜாங்க அமைச்சர் பதவியை ஜனாதிபதியிடம் பேசி, றிசாட் பதியுதீன் தடுத்ததாகக் கூறிய முஷாரப்; அதே நேர்காணலில்; தனக்குப் பதவி வழங்கப்படாமையானது “என்ன முடிவு? யாரால் எடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது” எனக் கூறியமையினைக் காணும் போது, அவர் உண்மை பேசவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவான முஷாரப்; அந்தக் கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக நடந்து கொண்டார். இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக மக்கள் காங்கிரஸ் அறிவித்திருந்தது. மேற்படி நேர்காணலில் பேசிய முஷாரப்’; “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனக்கு மிகப்பெரும் அநியாயத்தைச் செய்தது” எனவும் தெரிவித்தார்.