ரஞ்சனுக்கு நிபந்தனைகளுடன் பொது மன்னிப்பு


 நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கையொப்பமிட்டுள்ளார்.


இனி வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையையோ அல்லது நடவடிக்கையையோ மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான மேலதிக பணிகளை நீதி அமைச்சின் செயலாளர் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

21 ஆகஸ்ட் 2017 அன்று அலரி மாளிகைக்கு முன்பாக அவர் வழங்கிய அறிக்கைக்காக முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், 2021 ஜனவரி 12ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக ரஞ்சன் ராமநாயக்க நேற்று (25) சத்தியக் கடதாசி ஒன்றை வெளியிட்டு மன்னிப்புக் கோரினார்.

அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அந்த அறிக்கையால் பிரதம நீதியரசர் மற்றும் சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் வழங்கிய சத்தியக் கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் வழங்கிய சத்தியக் கடதாசியில், தாம் கூறிய கருத்துக்கள் பொய்யானவை எனவும், அந்த அறிக்கைகளை மீளப் பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான அறிக்கைகளை வெளியிடப் போவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments