யுத்தத்தின் சுவடுகளை வென்றெடுத்த சாதனைப் பயணம்: இடியப்ப வியாபாரியின் பேரன் மருத்துவ பீடத்திற்குத் தெரிவு!
போரின் கோரப்பிடியில் சிக்கி, உறவுகளைப் பறிகொடுத்து நிர்க்கதியாக நிற்கும் பலருக்கு மத்தியில், தன் வறுமையையும் இழப்புகளையும் படிக்கட்டுகளாக மாற்றி இன்று மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார் மூதூரைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் முஹம்மது றுஷ்தி.
விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 35ஆவது இடத்தைப் பிடித்து, மருத்துவத்துறைக்குத் தெரிவாகி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் இந்தத் தன்னம்பிக்கை நாயகன். இந்த வெற்றிச் செய்தியின் பின்னணியில் உறைந்திருக்கும் வலிகளும் தியாகங்களும் எவரையும் கண் கலங்கச் செய்யும்.
இறுதி யுத்தத்தின் கறுப்புப் பக்கங்களில் ஒன்றான 2006ஆம் ஆண்டு, மூதூர் பகுதி மீது நடத்தப்பட்ட கொடூரமான விமானத் தாக்குதல் பலரது வாழ்வை இருட்டிப்போகச் செய்தது. அந்தத் தாக்குதலில், றுஷ்தியின் தந்தை ஜெயினிதீன் முகம்மது அக்ரம் (மௌலவி), அன்புத் தாய், மற்றும் தந்தையின் சகோதரி என மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெற்றோரை அகால மரணத்தில் பறிகொடுத்த அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் தனி மரமாயினர். பின்னர், றுஷ்தி தனது வாப்பம்மாவின் (தந்தையின் தாய்) அரவணைப்பிலும், அவரது சகோதரன் தாயின் தாயிடமும் அடைக்கலம் புகுந்தனர். அன்றிலிருந்து அந்தச் சிறுவனின் உலகம் வாப்பம்மாவாக மட்டுமே சுருங்கிப் போனது.
பெற்றோரை இழந்த றுஷ்திக்குத் தாயாகவும் தந்தையாகவும் மாறினார் அவரது வாப்பம்மாவான ஜெமிலா உம்மா. தானும் ஒரு விதவையாக இருந்துகொண்டு, தன் பேரனின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க அவர் சிந்திய வியர்வைத் துளிகள் ஏராளம்.
நாளாந்தம் வீடுகளில் இடியப்பம் செய்து விற்று, அதில் கிடைக்கும் சொற்ப தினசரி வருமானத்தைக் கொண்டு றுஷ்தியின் கல்விச் செலவுகளைச் சமாளித்தார் அந்தத் தியாகத் தாய். வறுமை பற்களைக் கடித்தபோதும், பேரனின் படிப்பை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஜெமிலா உம்மாவின் சுருக்கம் விழுந்த கைகளே, இன்று ஒரு வருங்கால மருத்துவரை இந்தச் சமூகத்திற்கு ஈன்று கொடுத்துள்ளது.
றுஷ்தி, வறுமையையோ தன் வாழ்வில் நேர்ந்த பேரிழப்புகளையோ காரணம் காட்டி ஒருபோதும் முடங்கிப்போய்விடவில்லை. மாறாக, அவற்றையே தனது வெற்றிக்கான எரிபொருளாக மாற்றிக்கொண்டார்.
புத்தகப் புழுவாக மட்டும் சுருங்கிவிடாமல், மார்க்க விடயங்களிலும், விளையாட்டுத்துறையிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த மாணவனாக அவர் தன்னைச் செதுக்கிக்கொண்டார்.
"பல்வேறு இழப்புகளையும், வறுமையின் கோரப் பிடியையும் கடந்து, இன்று மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ள றுஷ்தியின் இந்த வெற்றி, வெறுமனே ஒரு தனிமனிதனின் வெற்றியல்ல; இது வலிகளைச் சுமந்து நிற்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான ஒரு நம்பிக்கைச் செய்தி."

Post a Comment