சுகாதாரத்துறையில் பாரிய வேலைவாய்ப்பு: தாதியர் பயிற்சிக்காக 2,918 பேர் உள்வாங்கல்!
தாதியர் சேவைக்கு புதிய உத்வேகம்: 2,918 பயிலுநர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன இன்று (14) முற்பகல் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், மாணவர் தாதியர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட 2,918 பேருக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்றது
2025 ஆம் ஆண்டுக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, 2022 ஆம் ஆண்டு அணியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்த விண்ணப்பதாரர்கள், நாடு முழுவதும் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் 03 வருட காலப் பயிற்சிக்காக இணைக்கப்படவுள்ளனர். எதிர்வரும் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் அந்தந்த தாதியர் பாடசாலைகளில் பதிவுகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் 06 ஆம் திகதி பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். இக்குழுவினர் 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவார்கள்.
2029 ஜூன் மாதமாகும் போது, இவர்கள் அனைவரும் அரச சேவையில் நிரந்தர தாதியர்களாக உள்வாங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மற்றும் நவம்பர் மாதங்களில் 3,441 பேர் டிப்ளோமாதாரிகளாக தாதியர் சேவையில் இணைக்கப்பட்டனர். அத்துடன், கடந்த ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டு வரும் மே மாதத்துடன் பயிற்சியை நிறைவு செய்யவுள்ள 517 தாதிப் பட்டதாரிகளும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், பட்டதாரிகள் உட்பட மேலும் 3,900 பேர் தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நான் இங்கு உரையாற்றுகையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடடார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்களான ஜனக கித்சிறி குணவர்தன, விசேட வைத்திய நிபுணர் குமார விக்ரமசிங்க, சாமிக கமகே, கே.பி. யோகச்சந்திரா மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நிமேஷா நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பிரதிப் பணிப்பாளர் நாயகங்களான ஜி.டபிள்யூ.சி.எஸ். பிரியபாஷினி, தினிப்ரிய ஹேரத், சிசிற குமார உள்ளிட்ட பணிப்பாளர்கள், தாதியர் பாடசாலை அதிபர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


















Post a Comment