(எம்.எஸ்.எம்.ஸாகிர்)



க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், புதிய நம்பிக்கையாளர் சபையின் மாபெரும் முதலாவது சிரமதான நிகழ்வு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் (03) இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.



சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில், தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரும் உதவிச் செயலாளருமான எஸார் மீராசாஹிப் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இம்மாபெரும் சிரமதான நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் சங்கங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இதன்போது புதிய நம்பிக்கையாளர் சபையின் பொருளாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம். முஸ்தபா அவர்கள் இயந்திரங்களை வழங்கி, பாரிய பங்களிப்புச் செய்தார். அத்துடன் புதிய நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களும் ட்ராக்டர் வாகனத்தை சிரமதானப் பணியில் ஈடுபடுத்தி தனது பங்களிப்பை வழங்கி இருந்தார். 


இந்நிகழ்வில்,

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவும் கலந்து கொண்டார். மேலும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஜாபிர் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்காலத்தில் தமது பாடசாலை மாணவர்களையும் பள்ளிவாசலுக்கான சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தி, ஒத்துழைப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.


அத்துடன் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.முஹம்மட் முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம்.முஸ்தபா, உதவிப் பொருளாளர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம். நஜீம் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், தோட்ட பராமரிப்புக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர்களான ஏ. ஜெஸ்மீர், எம்.ஐ. நஜீம் உட்பட தோட்டப் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மஹல்லாவாசிகள், ஜமாஅத்தினர் எனப் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு பூரணமான பங்களிப்பை வழங்கி இருந்தனர்.


இச்சிரமதானப் பணியில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கி, இணைந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் வழங்கிய அனைவருக்கும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர் இதன்போது தனது நன்றியினைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஸ்இமாம் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) யினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.