மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொருவர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (03)  கைது செய்யப்பட்டுள்ளார்.


மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, ஜனவரி 16ஆம் திகதி வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்தது.

இந்நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இருவர் உயிரிழந்ததுடன்  மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.  

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்துடன் தொடர்புடைய மூவர் உள்ளடங்களாக பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  விசேட அதிரடிப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார்  , புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை  (2) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்  மன்னாருக்கு  அழைத்து வரப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.