அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கைக்கு விஜயம் - FLASH NEWS - TAMIL


அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கைக்கு விஜயம்


அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா 2024 பெப்ரவரி 22 முதல் 23 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார். விஜயம் செய்த அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் மற்றும் தூதுக்குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிகளைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, அண்மையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனைய தனியார் நிறுவனத்திற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் வழங்கிய 553 மில்லியன் அமெரிக்க டொலர் அபிவிருத்தி உதவியை வரவேற்றார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உதவியையும் அவர் பாராட்டினார்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராக இலங்கையின் முன்னுரிமைகள் மற்றும் அனைவரும் வழிசெலுத்துவதற்கான சுதந்திரத்தை மேம்படுத்தி, வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்காக பசுமைப் பொருளாதாரம் மற்றும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, பிரதி இராஜாங்க செயலாளர் வர்மாவிடம் விளக்கினார். ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்குமான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் அவர் பிரதி இராஜாங்க செயலாளருக்கு எடுத்துரைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதி இராஜாங்க செயலாளர் வர்மா, பொருளாதார செழிப்பை நோக்கி நாட்டிற்கு தொடர்ச்சியான அமெரிக்க உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

பிரதி இராஜாங்க செயலாளருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் மொஹமட் ஜௌஹர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகளும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.