அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றது குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு திரு. டிரம்ப் மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளித்தது.

அமெரிக்காவை ஏமாற்றச் சதி செய்தல், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.காங்கிரஸ், அதிபர் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்குத் திரு டிரம்ப் சதி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.அவர் மேலும் 6 பேருடன் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளில் மோசடி நடத்தப்பட்டதாகக் கூறியது பொய் என்று தெரிந்தும் திரு டிரம்ப் வேண்டுமென்றே தேர்தல் நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையைக் கீழறுக்க எண்ணியதாகக் கூறப்பட்டது.குற்றச்சாட்டுகளை மறுத்த திரு டிரம்ப், தாம் எப்போதும் சட்டத்தைப் பின்பற்றியதாகக் கூறினார்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் திரு. டிரம்ப்பின் பங்கு உள்ளிட்ட விவகாரங்களில் விசாரணையை மேற்பார்வையிட சிறப்பு நீதிபதி ஜாக் சிமித் (Jack Smith) நியமிக்கப்பட்டிருந்தார்.வாஷிங்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்குச் செல்லும்படி திரு.டிரம்ப்புக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.