தோல்விகண்ட வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது - ஐக்கிய மக்கள் சக்தி

 (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டமாகவே நாம் கருதுகின்றோம். தோல்வி கண்டுள்ள வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவிக்கின்றனர்.


அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை கூறுகையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் புதுமையான, புதிய சிந்தனைகளை கொண்ட வரவு செலவு திட்டமொன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறான எந்தவொரு அவசியமான காரணிகளும் இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

 இவ்வாறான மோசமானதொரு வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்ததை எண்ணி நாம் கவலைப்படுகின்றோம். நாட்டின் நம்பிக்கை இதன் மூலமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்றே கூறியாக வேண்டும், எனவே இந்த வரவு செலவு திட்டம் தோல்வி கண்டுள்ளது என்றே நாம் கருதுகின்றோம் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஷோக அபேசிங்க கூறுகையில்,

இலக்கங்களை கொண்டு வரவு செலவு திட்டத்தை நிரப்பலாம் என நினைத்தாலும் இந்த வரவு செலவு திட்டம் முற்று முளுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டமாகவே நாம் கருதுகின்றோம். 

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு வருமானத்தை காட்டுகின்றனர், ஆனால் அவர்களின் கருத்துக்கும் வரவு செலவு திட்டத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் விதத்திலேயே இது அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார். 

Comments